மேகதாது அணை விவகாரம்... தமிழக அரசின் மனு தள்ளுபடி!
காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த முக்கிய மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தற்பொழுது அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையாகக் கருதப்படும் காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கான ஆரம்பகட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்குத் தமிழக அரசு தொடர்ந்து தங்களது பலத்த எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகிறது.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகளுக்குக் கர்நாடக அரசுக்குத் தடை விதிக்க முடியாது என்று கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியத் தீர்ப்பை வழங்கியிருந்தது. கர்நாடகாவிற்குச் சாதகமாக அமைந்த இந்தத் தீர்ப்பை எதிர்த்தும், அதனை மீண்டும் ஒருமுறை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 'மறுஆய்வு மனு' ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அரசின் இந்த மறுஆய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தற்பொழுது தங்களது இறுதி முடிவை அறிவித்துள்ளது. கடந்த 2025 நவம்பரில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யவோ அல்லது அதில் தலையிடவோ தற்பொழுது போதிய சட்ட முகாந்திரங்கள் எதுவும் இல்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
தமிழக அரசின் கோரிக்கையில் எவ்வித வலுவான காரணங்களும் இல்லை எனக் கூறி, மாநில அரசு தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தமிழகத்தில் புதிய தவெக அரசு பொறுப்பேற்றுள்ள இந்தச் ஆரம்பகட்ட சூழலில், மேகதாது அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு தமிழக அரசுக்கும், விவசாயிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்துத் தமிழக அரசு தற்பொழுது தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.