பிளவுபட்ட ஓ.பி.எஸ் அணி... வெல்லமண்டி நடராஜன் அதிமுகவில் இணைந்தார்!
தமிழக அரசியலில் இன்று ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது அணியில் இருந்த மற்ற முக்கியத் தலைவர்களும் வெவ்வேறு முடிவுகளை எடுத்து வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே, வெல்லமண்டி நடராஜன் அதிமுகவிற்குத் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஓ.பி.எஸ் திமுகவில் இணைந்தபோது, அவரது முக்கிய ஆதரவாளர்களாகக் கருதப்பட்ட பலரும் வெவ்வேறு பாதைகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர்: ஆர். வைத்திலிங்கம் (முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ), மனோஜ் பாண்டியன். வெல்லமண்டி நடராஜன், தர்மர் (எம்.பி) அதிமுகவில் இணைந்தார்கள். ஜே.சி.டி. பிரபாகர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் சமீபத்தில் இணைந்தார்.
திருச்சி பகுதியைச் சேர்ந்த வெல்லமண்டி நடராஜன், ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் பிளவின் போது ஓ.பி.எஸ் பக்கம் நின்ற இவர், தற்போது ஓ.பி.எஸ்-ன் திமுக இணைப்பு முடிவில் உடன்பாடு இல்லாததால் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கே திரும்பியுள்ளார்.
"ஓ.பி.எஸ் திமுகவிற்குச் சென்றது அவரது தனிப்பட்ட முடிவு. ஆனால், அதிமுகவை உருவாக்கிய எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளுக்கு எதிராக என்னால் செயல்பட முடியாது" என்பதே வெல்லமண்டி நடராஜன் போன்றோரின் கருத்தாக இருப்பதாகக் கூறப்படுகிறது.