”தினமும் 6 கிலோ மீட்டர் வரை நடக்குறோம்”.. பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படும் மாணவர்கள்..!!

 

பேருந்து வசதி இல்லாததால் தினமும் 6 கிலோ மீட்டர் வரை மாணவர்கள் நடந்து செல்வதாக கிராமத்து மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே  மலைக்கோவிலூர் என்ற மிகப்பெரிய கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமம் மூலப்பட்டி. இதேபோல 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன வடுகநாகம்பள்ளி மற்றும் குப்பை மேட்டுப்பட்டி கிராமங்கள். இங்குள்ள சுமார் 50க்கும் மேற்பட்ட சிறார்கள் உள்ளூரில் உள்ள பள்ளியிலேயே ஆரம்பப் பள்ளியில் கல்வி கற்கின்றனர். அதன்பிறகு, ஆறாம் வகுப்புக்கு மலைக்கோவிலூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தான் படிக்க வேண்டியதாக இருக்கும்.

இதனிடையே கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை பள்ளி நேரத்திற்கு பேருந்து இயக்கப்பட்டதால் அந்தப் பேருந்தில் அம்மாணவர்கள் பள்ளிக்கு சென்று வந்தனர். வெளியூரில் வேலைக்கு சென்று வருபவர்களுக்கும், பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், கொரோனாவுக்கு பிறகு இந்த ஒற்றை பேருந்தும்  நிறுத்தப்பட்டது. இதனால் பேருந்து வசதி இல்லாததால் தற்போது மாணவர்கள் தினசரி மூன்று முதல் ஆறு கிலோமீட்டர் வரை நடந்து சென்று வருகின்றனர். காலை வேலைகளில் இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்லும் பலர்  மாணவர்களைப் தங்களுடைய வாகனங்களில் அழைத்துச் சென்று பள்ளியில் விடுகின்றனர். ஆனால் மாலை நேரத்தில் வீடு திரும்ப பேருந்து வசதி இல்லாததால் தினமும் மூன்று முதல் ஆறு கிலோமீட்டர் நடந்து சென்று வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என்று கிராமத்து மக்கள் மற்றும் மாணவர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.