"மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை.. நீலகிரியில் அரசு டாக்டர் வெறித்தனம்.. வீடியோ எடுத்து கொடூரம்”

 

நீலகிரி மாவட்டம் உதகையில், மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிக்கு நேர்ந்த கொடூரச் சம்பவம் கல்விச் சூழலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சமீபமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர், கல்லூரி மாணவி ஆசைவார்த்தைகளைக் கூறி தனியார் ஹோட்டலுக்கு வரவழைத்து, பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். 

உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழகம் மட்டுமல்லாமல் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அங்கு அவசரப் பிரிவில் மருத்துவராகப் பணியாற்றி வந்தவர் ஓம் பிரகாஷ்.

இவர், வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மாணவியிடம் படிப்பில் உதவி செய்வது போல நடித்து, அடிக்கடி பேசி வந்துள்ளார். "உனக்கு என்ன சந்தேகம் இருந்தாலும் என்னிடம் கேள், நான் சொல்லித் தருகிறேன்" என மிகுந்த அக்கறையுடன் பழகி மாணவியின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

பல்கலைக்கழகத் தேர்வுகள் நெருங்கி வரும் சூழலில், தேர்வில் வெற்றி பெற உதவுவதாகக் கூறி மாணவியைத் தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஓம் பிரகாஷை நம்பிச் சென்ற மாணவிக்குக் காத்திருந்தது பேரதிர்ச்சி.

உதகையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலுக்கு மாணவியை அழைத்துச் சென்ற மருத்துவர், அங்கு மது அருந்தியுள்ளார். "பல்கலைக்கழக அதிகாரிகளிடம் பேசி உன்னைத் தேர்வில் வெற்றி பெற வைக்கிறேன்" என ஆசை வார்த்தை கூறி, பின் போதை தலைக்கேறிய நிலையில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மாணவி தடுத்தும் பலனின்றி, அவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

மாணவியின் சத்தம் கேட்டு அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள், நிலைமையைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், முதற்கட்ட விசாரணையில் மருத்துவர் ஓம் பிரகாஷின் குற்றத்தை உறுதி செய்தனர். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததும், வீடியோவும் எடுத்திருந்தது தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஓம் பிரகாஷ் சென்னையைச் சேர்ந்தவர். விசாரணையில் இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி, இரண்டு மனைவிகளும் இவரைப் பிரிந்து சென்றது தெரியவந்துள்ளது. உதகையில் தனிமையில் வசித்து வந்த இவர், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மாணவியைச் சீரழித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் புகாரைப் பெற்றுக்கொண்ட உதகை அனைத்து மகளிர் போலீசார், ஓம் பிரகாஷைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர் ஏற்கனவே வேறு மாணவிகளிடமும் இதுபோன்று அத்துமீறியுள்ளாரா? என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.