உலக பயங்கரவாதக் குறியீடு... லிஸ்டில் முதலிடத்தைப் பிடித்த பாகிஸ்தான்!
பொருளாதாரம் மற்றும் அமைதி மையம் வெளியிட்டுள்ள 2026ம் ஆண்டிற்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு குறித்த ஆய்வறிக்கையில், பாகிஸ்தான் உலகிலேயே பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள 163 நாடுகளில் பயங்கரவாதத்தின் தாக்கம், உயிரிழப்புகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் முதன்முறையாக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் முதலிடம் பிடிக்கக் காரணங்கள்:
பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட 'தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான்' (TTP) அமைப்பு, அந்நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுடன் நிலவும் சுமூகமற்ற உறவு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பாகிஸ்தானைப் பாதித்துள்ளது.
பலூசிஸ்தான் பகுதியில் அதிகரித்து வரும் பிரிவினைவாத வன்முறைகளும், பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்களும் இந்த மோசமான நிலைக்கு முக்கியக் காரணமாகும்.
கடந்த 2013ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தானில் பயங்கரவாதம் சார்ந்த மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக 2025ம் ஆண்டில் 1,045 பயங்கரவாதச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பயங்கரவாதம் தொடர்பான வன்முறைகளில் மொத்தம் 1,139 பேர் உயிரிழந்துள்ளனர்.
டி.டி.பி (TTP) - உலகளாவிய அச்சுறுத்தல்:
இந்த அறிக்கையின்படி, டி.டி.பி அமைப்பானது உலக அளவில் 3-வது கொடிய பயங்கரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் உலகளவில் செயல்பட்ட நான்கு பெரிய பயங்கரவாதக் குழுக்களில், தனது தாக்குதல் வேகத்தையும் செயல்பாட்டையும் கணிசமாக அதிகரித்த ஒரே இயக்கமாக டி.டி.பி உருவெடுத்துள்ளது.
பாதுகாப்புச் சவால்கள்:
பயங்கரவாதக் குறியீட்டில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்திருப்பது, அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு விடப்பட்ட மிகப்பெரிய எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. முதலீடுகள் குறைதல், சுற்றுலா பாதிப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாதல் போன்ற சிக்கல்களை இது மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.