"சூனியம் இருக்கு.. 2 வாரம் இங்கேயே தங்கு!" - 19 வயது இளம்பெண்ணைக் கடத்திய போலி சாமியார் -  பெற்றோருக்கு மிரட்டல்!

 

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகே, பரிகாரம் செய்ய வந்த இளம்பெண்ணைப் போலி சாமியார் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆலங்காயம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், வாணியம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக (Nurse) பணியாற்றி வருகிறார். அடிக்கடி ஏற்பட்ட உடல்நலக் குறைவைச் சரிசெய்ய, பெற்றோர் அவரை கொல்லகுப்பம் பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குச் சாமியாராக இருந்த சுப்பிரமணி என்கிற ராமசாமி (45), "உங்களுக்கு யாரோ சூனியம் வைத்துள்ளனர்; ஆடு, கோழி பலியிட்டால் தான் சரியாகும்" எனக் கூறிப் பெற்றோரிடம் ஆயிரக்கணக்கில் பணம் பறித்துள்ளார். அதன் பின்னரும் சரியாகாததால், "கோயிலிலேயே தங்கி 2 வாரம் பூஜை செய்தால் குணமாகும்" என ஆசை வார்த்தை கூறியுள்ளார். மகளின் உடல்நிலை சரியாக வேண்டும் என்ற நம்பிக்கையில் பெற்றோரும் அந்தப் பெண்ணை அங்கு விட்டுச் சென்றுள்ளனர்.

பூஜை முடிந்து வீடு திரும்பிய நர்ஸிடம், அந்தச் சாமியார் போன் மூலம் அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி வேலைக்குச் சென்ற இளம்பெண் மாயமானார். பதறிப்போன பெற்றோர் தேடிக்கொண்டிருந்தபோது, சாமியாரே அவர்களுக்குப் போன் செய்து, "உங்கள் மகளைத் திருப்பதிக்குக் கடத்திச் சென்றுவிட்டேன், அங்கே வைத்துத் திருமணம் செய்யப் போகிறேன்; இனித் தேடாதீர்கள்" என அதிரடியாகக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், போலி சாமியார் சுப்பிரமணிக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அம்பலமாகியுள்ளது. கைவரிசை காட்டிய அந்த போலி சாமியாரையும், மீட்கப்பட வேண்டிய அந்த இளம் செவிலியரையும் தேடி போலீஸார் தனிப்படை அமைத்துத் தீவிரமாக வலைவீசி வருகின்றனர். "பக்தியைப் பயன்படுத்திப் பெண்களை ஏமாற்றும் இது போன்ற போலி நபர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" எனப் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.