ராட்சதக் காளையுடன் திருப்பதிக்கு நீண்ட நடைபயணம்!
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரேம் கோண்டு என்ற தீவிரப் பக்தர் அரிய வகையான கங்கராஜ் இனத்தைச் சேர்ந்த காளை ஒன்றை வளர்த்து வருகிறார். மிகப்பெரிய நீளமான கொம்புகளையும் பிரம்மாண்ட தோற்றத்தையும் கொண்ட அந்தக் காளையுடன் அவர் பல நாட்களாகத் தொடர் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்வதற்காகத் தனது காளையுடன் பாதயாத்திரையாக வரும் அவர் சூரியாபேட்டைப் பகுதியை வந்தடைந்துள்ளார். ராட்சதக் கொம்புகளுடன் கம்பீரமாகக் நடந்து வரும் அந்தக் காளையின் தோற்றம் வழியெங்கும் உள்ள பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகிறது.
இந்த விசேஷமான புனித யாத்திரை குறித்துப் பக்தர் பிரேம் கோண்டு நெகிழ்ச்சியுடன் பல சுவாரசியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினர் கடந்த 150 ஆண்டுகளாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கங்கராஜ் காளையுடன் புனிதத் தலங்களுக்கு நடைபயணம் செல்வது வழக்கமாகும். முன்னோர்கள் காலம் தொட்டுத் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த ஆன்மீக மரபை அவரும் மிகுந்த பக்தியுடன் பின்பற்றி வருகிறார். எந்தப் புனிதத் தலத்திற்குச் சென்றாலும் இந்தக் காளையை ஸ்ரீ நந்தீஸ்வரரின் நேரடி சொரூபமாகக் கருதித் தங்களுடன் அழைத்துச் செல்வதாகக் கூறினார்.
இப்படி காளையை அழைத்துச் செல்வதன் மூலம் எம்பெருமான் கைலாசநாதரின் பூரண அருள் தங்களுக்குக் கிடைக்கும் என்பது அவர்களின் ஆழ்ந்த நம்பிக்கையாக உள்ளது. முதலில் ஸ்ரீசைலம் திருத்தலத்திற்குச் சென்று ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமியைத் தரிசனம் செய்த அவர்கள் தற்போது திருப்பதியை நோக்கி முன்னேறுகின்றனர். விரைவில் திருமலை திருப்பதி சென்றடைந்து ஏழுமலையான் வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்து தங்களது நெகிழ்ச்சியான நேர்த்திக்கடனைச் செலுத்த உள்ளனர். நீண்ட கொம்புகளுடன் நடைபயணம் மேற்கொண்டு வரும் இந்தக் காளையையும் பக்தரையும் பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் கண்டு வணங்கி வருகின்றனர்.