திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு மேல் செல்ல ஆட்டோக்களுக்கு 14 நாட்கள் தடை !
திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு மேல் பகுதியில் ஆட்டோக்கள் செல்வதற்கு 14 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று வியாழக்கிழமை, நாளை வெள்ளிக்கிழமை மற்றும் செப்டம்பர் 6, 7, 13, 14, 17, 20, 23, 24, 25, 27, 28, 30 ஆகிய நாட்களில் விழா மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளையொட்டி ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கண்ட 14 நாட்களிலும் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்வது முற்றிலுமாகத் தடை செய்யப்படுவதாகக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இருப்பினும், இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல அனுமதி உண்டு என்பதோடு, இடவசதிக்கு ஏற்ப கார்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மலைக்கோவில் நுழைவுப் பகுதியில் இருந்து படா செட்டிகுளம் வரை பக்தர்கள் கட்டணமின்றி கோவில் பஸ்களில் பயணம் செய்யலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.