நெல்லை - தாதர் எக்ஸ்பிஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு - ரயில் நிலைய மாற்றம் அறிவிப்பு!
நெல்லை - தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வருகிற ஏப்ரல் முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மற்றும் மும்பை இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவது குறித்தும், அதன் தொடக்க/முடிவு ரயில் நிலையம் மாற்றப்படுவது குறித்தும் தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பயணிகளின் வசதிக்காகவும், கோடைக்கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும் நெல்லை - தாதர் இடையேயான ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. வண்டி எண் 22630 (நெல்லை - தாதர்) ரயிலில் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு ஏ.சி. பெட்டியும் (2-Tier AC), நான்கு மூன்றாம் வகுப்பு ஏ.சி. பெட்டிகளும் (3-Tier AC) இணைக்கப்படும்.
வண்டி எண் 22629 (தாதர் - நெல்லை): மறுமார்க்கமாக தாதரிலிருந்து வரும் ரயிலில் ஏப்ரல் 16-ம் தேதி முதல் இதேபோன்று கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படும்.
தற்போது தாதர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும் இந்த ரயில், ஏப்ரல் மாதம் முதல் மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் (LTT) நிலையத்திற்கு மாற்றப்படுகிறது. தாதரிலிருந்து நெல்லை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (22629), வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் தாதருக்குப் பதிலாக மும்பை லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.
இதே போல, நெல்லையிலிருந்து தாதர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும் (22630) மேற்கண்ட லோக்மான்ய திலக் டெர்மினஸ் ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த மாற்றங்களை ரயில் பயணிகள் கவனத்தில் கொண்டு தங்களது பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.