நாளை திருப்பதியில் அனைத்து விஐபி தரிசனங்களும் ரத்து - தேவஸ்தானம் அறிவிப்பு!

 

நாளை செப்டம்பர் 13ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து விதமான விஐபி தரிசனத்தை ரத்து செய்து தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாளை முழுவதும் ஒதுக்கப்பட்டிருந்த அனைத்து விஐபி தரிசனங்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தற்போது இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. அதோடு, தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் நாளை பக்தர்களின் வருகை வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பக்தர்களின் நீண்ட நேரக் காத்திருப்பைக் குறைக்கவும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சாமானிய பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி விரைவாக சுவாமி தரிசனம் செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.