இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... கலெக்டர் உத்தரவு - தென்காசி மாவட்டத்தில் ஆடி தபசு விழா கோலாகலம்!
தென்காசி மாவட்டத்தில் சங்கரநாராயணசாமி கோவில் ஆடித்தபசுத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்துக் கொண்ட நிலையில், இன்று ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு, திருவிழாவில் உள்ளூர் பக்தர்களும் கலந்துக் கொள்ள வசதியாக இன்று தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அருள்மிகு கோமதி அம்மன் சமேத சங்கரநாராயணசாமி கோவில் ஆடித்தபசுத் திருவிழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்வான தபசுத் திருவிழாவை முன்னிட்டுப் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக இன்று ஜூலை 28ம் தேதி மாவட்ட அளவிலான உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறையை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அத்தியாவசியச் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி சனிக்கிழமை தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். பக்தர்கள் திரளாகக் கலந்து கொள்ளும் இந்த ஆடித்தவசுத் திருவிழாவை முன்னிட்டுச் சங்கரன்கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், சிறப்புக் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.