இன்று ரமலான் திருநாள்... பசி இல்லாத உலகை உருவாக்க சபதம் ஏற்போம்!
இன்று நாடு முழுவதும் இஸ்லாமிய சகோதரர்களின் புனித திருநாளாக ரமலான் ஈத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வருடம் முழுவதும் உழைத்து களைக்கும் மனதுக்கும், உடலுக்கும் ஓய்வு கொடுத்து இறை சிந்தனையில் நிலைநிறுத்தும் காலம் இந்த ரமலான் மாதம். நோன்பு நாட்களில் சூரிய உதயம் தொடங்கி சூரியன் மறையும் வரை வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து கடவுளை வழிபடும் மாதம். இதனால் உடலுக்கும், மனதுக்கும் பலவிதமான நன்மைகள். இறைவனின் கட்டளையாகவே இஸ்லாமியர்கள் நோன்பு நோற்கிறார்கள்.
ரமலான் மாதத்தில் 5 வேளைத் தொழுகையால் இறைவன் எதிர்பார்த்து ஒவ்வொரு மனிதனும் தவமாய்த் தவமிருந்து செய்ய வேண்டிய உள்முக பயணம் தான்.
பொய், புறம், கோள், பொய் சத்தியம், காமப்பார்வை போன்ற தீய குணங்கள் விலகி விடும் என்பதும் காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை. எவரால் பொய் சொல்வதையும், போலி வாழ்க்கை வாழ்வதையும் விடமுடியவில்லையோ அவருக்கு நோன்பால் இறைவனிடம் எப்பயனும் கிட்டாது என எச்சரிக்கை விடுக்கிறார் இறைதூதர்.
இறைநம்பிக்கை, தொழுகை நோன்பு, ஏழை வரி, ஹஜ் யாத்திரை இந்த 5 விஷயங்களும் தான் இஸ்லாமின் தூண்கள். மனத்தூய்மையே இதனை தாங்குகின்ற நிலம். நிலம் தான் ஆதாரம். உணவிலிருந்து உடலையும் தீமையிலிருந்து மனதையும் பாதுகாத்துக் கொள்வது தான் நோன்பின் தாத்பர்யம். ரமலான் என்றால் 'எரிப்பவன்' . இஸ்லாமிய மாதங்களில் 9 வது மாதம் தான் இந்த 'ரமலான் மாதம்.
மனதின் தீய எண்ணங்களை எரித்து தூய்மையாக்கும் மாதம் இந்த ரமலான். அதே நேரத்தில் ஏழையின் பசிக்கு உணவிட வேண்டும். ஏழையின் பசியை அறிந்து அவனுக்கு உணவிட்ட பிறகே நீ உண்ண வேண்டும் என்ற தத்துவத்தின் அடிப்படைதான் ரமலான் நோன்பு பெருநாளாகவும் ஈகைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த ரமலான் நன்னாளில் பசித்திருக்கும் மனிதர்கள் இல்லாத உலகத்தை உருவாக்க சபதம் ஏற்போம். மனிதம் போற்றுவோம். இனிய ரமலான் வாழ்த்துகள்!