காங்கிரஸ் செய்தது பச்சைத் துரோகம் - டி.ஆர்.பாலு ஆவேசம்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்ட நேரமெல்லாம் உற்றத் தோழனாக இருந்த திமுக-வுக்கு, அவர்கள் தற்போது பச்சைத் துரோகம் செய்துள்ளதாகத் தனது அறிக்கையில் சாடியுள்ளார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற 5 சட்டமன்ற உறுப்பினர்களைப் பணயம் வைத்து, சந்தர்ப்பவாத அரசியலில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக 2019 தேர்தலில் முதன்முதலில் முன்மொழிந்தவர் மு.க.ஸ்டாலின் என்பதை நினைவுகூர்ந்துள்ள பாலு, அந்தப் பாசப்பிணைப்பைத் தற்போது காங்கிரஸ் முறித்துக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
குறுக்கு வழியில் அதிகாரத்தைப் பிடிக்க பாஜக செய்யும் அதே வேலையைத் தமிழ்நாட்டில் காங்கிரஸ் செய்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். திமுக ஆட்சி அமையும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு, காங்கிரஸ் கட்சி செய்துள்ள இந்தச் செயல் மிகப்பெரிய அரசியல் அறமீறல் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
திமுக-வுக்குத் தோல்விகளும் துரோகங்களும் புதிதல்ல என்றும், ஆனால் அவை என்றுமே நிரந்தரமானவை அல்ல என்றும் டி.ஆர்.பாலு தனது அறிக்கையில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் இந்த ராஜதந்திரம் ஒரு கொள்கை முகமூடி அணிந்த நாடகம் என்பது ஊரறிந்த விஷயமாகி விட்டதாக அவர் விமர்சித்துள்ளார். துரோகங்களுக்குக் காலம் நிச்சயம் பதில் சொல்லும் என்று குறிப்பிட்டுள்ள அவர், எத்தகைய சூழலிலும் திமுக தனது கொள்கைப் பயணத்தில் உறுதியாக இருக்கும் எனத் தொண்டர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார்.