திருப்பத்தூரில் துயரம்... கபடி விளையாடிக் கொண்டிருந்த 12ம் வகுப்பு மாணவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

 

திருப்பத்தூர் லாலா ஏரி பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற கபடிப் போட்டியில் பங்கேற்று விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்று வந்த முகேஷ் என்ற மாணவர், அங்கு நடைபெற்ற கபடிப் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விளையாடியுள்ளார்.

போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்த மாணவரை, அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் முகேஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.