திருச்சியில் அதிர்ச்சி: பள்ளி கட்டிடத்தில் சிறுமி கூட்டு பலாத்காரம் - 4 மாணவர்கள் கைது!

 

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெற்றோர் இன்றி உறவினர் அரவணைப்பில் வளர்ந்து வரும் 16 வயது சிறுமி ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வசித்து வந்தார். அப்பகுதியைச் சேர்ந்த ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள் அந்தச் சிறுமியை ஏமாற்றி அப்பகுதியில் கட்டப்பட்டுவரும் புதிய பள்ளி கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தொடர்ந்து நடந்த இந்தச் சம்பவத்தினால் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்த விவரங்களை அழுதுகொண்டே தனது சித்தியிடம் தெரிவித்துள்ளார். உடனடியாகச் சிறுமியைத் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்த குடும்பத்தினர், கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர் நான்கு மாணவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அந்த நான்கு பேரையும் தஞ்சாவூரில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்த நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.