திருச்சி குலுங்குது... 10 லட்சம் பேருக்கு தடபுடல் விருந்து... களைக்கட்டும் திமுக மாநில மாநாடு!

 

திருச்சி முழுவதுமே திருவிழா தான். சாரை சாரையாக வந்துக் கொண்டிருக்கும் தொண்டர்களுக்கு தடபுடலான விருந்துடன் மாநாடு களைக்கட்ட துவங்கியிருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் திருச்சியில் நடத்தத் திட்டமிட்டுள்ள மாநில மாநாடு விவராங்கள் நாடு முழுவதுமே அரசியல் கட்சிகளிடையே பேசுபொருளாகி வருகிறது.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, வெறும் அரசியல் நிகழ்வாக மட்டுமல்லாமல், ஒரு பிரம்மாண்ட விழாவாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டிற்குத் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காகத் தஞ்சாவூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. 10 லட்சம் பேருக்கும் எவ்வித தங்குதடையுமின்றி தரமான மற்றும் சுவையான உணவு வழங்க திமுக தலைமை விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இதற்காக ஆயிரக்கணக்கான சமையல் கலைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். காலைச் சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு என அனைத்தும் மாநாட்டுத் திடலிலேயே வழங்கப்பட உள்ளது. உணவு விநியோகத்தை முறைப்படுத்த நூற்றுக்கணக்கான கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

2026 தேர்தலுக்கான வெற்றிக் கொள்கைகளை இந்த மாநாட்டின் மூலம் முதல்வர் ஸ்டாலின் பிரகடனம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. "வெல்லும் திராவிட மாடல்" என்ற முழக்கத்துடன் இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. மாநாட்டிற்கு வருபவர்களுக்காகச் சிறப்புப் பேருந்துகள், தங்குமிடங்கள், மருத்துவ முகாம்கள் மற்றும் குடிநீர் வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது போராட்டங்களை அறிவித்துள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், ஆளுங்கட்சியின் செல்வாக்கை நிலைநாட்டவும் இந்த மாநாடு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என உடன்பிறப்புகள் கருதுகின்றனர்.