4 இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த தடை நீக்கம்  - வர்த்தகத்தைத் தொடர அனுமதி!

 

இந்தியப் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை நிறுவனங்களுக்கு உலகளாவிய ரீதியில் பெரும் நிம்மதியளிக்கும் வகையிலான ஒரு சர்வதேச வர்த்தக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஷ்ய ராணுவத்திற்குத் தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் இரட்டைப் பயன்பாட்டுப் பொருட்களை வழங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்காவால் தடை செய்யப்பட்டிருந்த 4 முக்கிய இந்திய நிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க நிதித்துறையின் வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள தடையற்ற நிறுவனங்களின் புதிய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஹைதராபாத்தை மையமாகக் கொண்ட ஆர்.ஆர்.ஜி இன்ஜினியரிங் டெக்னாலஜிஸ்  நிறுவனம், ரஷ்யாவின் தடை பட்டியலில் உள்ள நிறுவனங்களுக்கு மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்களை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

லோகேஷ் மெஷின்ஸ் நிறுவனமும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பொதுப் பங்குகளைக் கொண்ட நிறுவனமாகும். ரஷ்ய உற்பத்தி நிறுவனங்களுக்கு இயந்திரக் கருவிகளை வழங்கியதாக இதன் மீது தடை விதிக்கப்பட்டிருந்தது.

அகமதாபாத்தைச் சேர்ந்த கேலக்ஸி பேரிங்ஸ் நிறுவனம், ரஷ்யாவிற்கு அதிமுக்கியப் பயன்பாட்டுப் பொருட்களான ரோலர் பேரிங்குகளை ஏற்றுமதி செய்ததாகக் கூறப்பட்டது.

புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சௌர்யா ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ரேடார் கருவிகள் மற்றும் ரேடியோ வழிகாட்டுதல் சாதனங்களை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக அமெரிக்கா தடை விதித்திருந்தது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் தொடர்ந்து, ரஷ்ய ராணுவத்திற்கு மறைமுகமாக உதவும் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு உலக நாடுகளின் நிறுவனங்களுக்குக் கடுமையான தடைகளை விதித்து வந்தது. அந்த வகையில் கடந்த 2024 ஆம் ஆண்டு இந்த 4 நிறுவனங்கள் உட்பட மொத்தம் 21 இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் தடைப் பட்டியலில் சேர்க்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, சர்வதேச அளவில் இந்திய நிறுவனங்கள் சட்டபூர்வமான விதிகளின் படியே தங்களது வர்த்தகத்தை மேற்கொள்கின்றன என்பதை எடுத்துக்கூறி, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அமெரிக்கத் தரப்புடன் தொடர்ந்து தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. இந்தத் தொடர் ராஜதந்திர முயற்சிகளின் பயனாக, சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த 4 நிறுவனங்கள் மீதான தடையும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தடை நீக்கத்தின் மூலம், உலகளாவிய முன்னணி நிறுவனங்களுடன் தங்களது வர்த்தகப் பங்களிப்பை மீண்டும் தொடர இந்த நிறுவனங்களுக்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, வால்வோ, சுஸுகி மற்றும் ஜான் டீரே போன்ற உலகளாவிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ள லோகேஷ் மெஷின்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள், இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பங்குச்சந்தையில் நல்ல உயர்வைச் சந்தித்துள்ளன.