சாலையில் கட்டுக்கட்டாக சிதறிய 4 லட்சம் ரூபாய் பணம்: துரத்திப் பிடித்து போலீசில் ஒப்படைத்த நேர்மையான இளைஞர்கள்!

 

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி பகுதியில் பைக்கில் சென்ற நபர் ஒருவரின் பை திடீரென திறந்து கொண்டதில் உள்ளே இருந்த 4 லட்சம் ரூபாய் பணம் சாலையில் சிதறியது. கட்டுக்கட்டாகப் பணம் கீழே விழுந்ததைக் கவனிக்காமல் அந்த நபர் தொடர்ந்து சென்ற நிலையில், அவ்வழியாக வந்த இரண்டு இளைஞர்கள் அந்தப் பணத்தை மீட்டனர். பணத்தை இழந்தவரைத் துரத்திச் சென்று பிடிக்க முயன்றும் அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிட்டதால், அந்த இளைஞர்கள் செய்வதறியாது திகைத்தனர். உடனடியாக அவர்கள் காவல் துறையின் அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தைக் கூறி பணத்தைப் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

தற்போது அந்தப் பணம் காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள நிலையில், முறையான ஆதாரங்களுடன் வரும் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணத்தை இழந்த நபர் பதற்றத்தில் இருக்கலாம் என்பதால் இது குறித்த தகவலைப் பல்வேறு இடங்களுக்கும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இன்றைய காலக்கட்டத்தில் இப்படியும் சில நேர்மையான இளைஞர்கள் இருப்பது மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளதாகப் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர். ஷாம்லி நகரமே தற்போது இந்த இரண்டு இளைஞர்களின் நேர்மையைப் பற்றித்தான் பெருமையாகப் பேசி வருகிறது.