இந்தியா-பாகிஸ்தான் போரின் நாயகன் 'வீர் சக்ரா' ஹீரோ கே.ஜி. ஜார்ஜ் காலமானார்.. முழு ராணுவ மரியாதையுடன் இறுதியஞ்சலி!
இந்தியாவின் பெருமைக்குரிய போர் வீரரும், 1965-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின் கதாநாயகனுமான கே.ஜி. ஜார்ஜ் இன்று காலமானார். அவருக்கு வயது 95.
இந்திய ராணுவ வரலாற்றில் கே.ஜி. ஜார்ஜ் அழியாத இடத்தைப் பிடித்தவர். 1965 இந்தியா-பாகிஸ்தான் போரின் போது எல்லையில் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராகக் கடும் சவால்களை எதிர்கொண்டு, மிகச்சிறந்த போர் வியூகங்களை வகுத்துச் செயல்பட்டார். போர்க்களத்தில் அவர் காட்டிய ஈடு இணையற்ற துணிச்சலைப் பாராட்டி, இந்திய அரசு அவருக்கு நாட்டின் மிக உயரிய ராணுவ விருதுகளில் ஒன்றான 'வீர் சக்ரா' வழங்கி கௌரவித்தது. தனது நீண்ட கால ராணுவப் பணியில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த இவர், இளம் வீரர்களுக்குச் சிறந்த வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
அவரது மறைவு குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கே.ஜி. ஜார்ஜ் அவர்களின் இழப்பு இந்திய ராணுவத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்று. அவரது வீரம் எதிர்கால வீரர்களுக்குத் தொடர்ந்து உத்வேகத்தை அளிக்கும்" என்று புகழாரம் சூட்டியுள்ளது. ராணுவ அதிகாரிகள் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் ஜார்ஜ் அவர்களின் மறைவிற்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.