வெனிசுலாவில் நிலநடுக்கப் பேரழிவு... பலி எண்ணிக்கை 3,342 ஆக உயர்வு, மீட்புப் பணிகள் தீவிரம்!

 

வெனிசுலா நாட்டில்   ஜூன் 24 ம் தேதி 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்கள் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த இயற்கைச் சீற்றத்தின் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமான நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,342 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளதாகத் தேசிய சட்டமன்றத் தலைவர் ஜோர்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விபத்தில் 16,740 க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வெனிசுலாவில் இதுவரை 995 முறைக்கும் மேலாக நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதால் பொதுமக்கள் கடுமையான பீதியில் உறைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 6,462 பேரை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ள நிலையில், வீடுகளை இழந்த 17,345 க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களின் அவசரத் தேவைகளுக்காகவும், தங்குவதற்கும் அரசு சார்பில் 80 தற்காலிக முகாம்கள் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.

பேரழிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் வெளிநாட்டைச் சேர்ந்த 3,281 வீரர்கள் உட்பட மொத்தம் 29,567 மீட்புப் படை வீரர்கள் இரவு பகலாகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக வெனிசுலாவில் 7 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டின் தற்காலிக அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் உருக்கமாக அறிவித்துள்ளார். இதற்கிடையே, நிலநடுக்கத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுலா மக்களுக்கு உதவும் பொருட்டு, இந்தியா தனது 'ஆபரேஷன் அமிஸ்தாத்' திட்டத்தின் கீழ் மருத்துவக் குழுவினர் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி உதவிக்கரம் நீட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.