பகீர் வீடியோ.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பாட்டி - கோவையில் பரபரப்பு!
கோவையில் நடுரோட்டில் திடீரென வலிப்பு வந்தது போல் நடித்து பொதுமக்களிடம் நூதன முறையில் பணம் பறித்து வந்த பாட்டி குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலைகளில் இந்த பாட்டி சுற்றித் திரிந்துள்ளார். அப்போது திடீரென தரையில் விழுந்து தனக்குக் கடுமையான வலிப்பு ஏற்பட்டது போலக் கைகால்களை உதறி நாடகமாடியுள்ளார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், மனிதாபிமான அடிப்படையில் அவருக்கு முதலுதவி செய்து, மருத்துவச் செலவிற்காகத் தங்களால் இயன்ற பணத்தையும் கொடுத்து உதவியுள்ளனர். அந்தப் பாட்டி இதே பாணியில் வெவ்வேறு இடங்களில் தொடர்ந்து நாடகமாடிப் பணம் பறிப்பதைச் சிலர் கவனித்துள்ளனர்.
பாட்டியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வரும் வகையில், அவர் வலிப்பு வருவது போல் நடிக்கும் காட்சிகளைப் பொதுமக்கள் ரகசியமாகச் செல்போனில் படம்பிடித்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.