பகீர் வீடியோ... பாலியல் கைதிக்கு கேக் ஊட்டி, நடுரோட்டில் பட்டாசு வெடித்து போலீசார் பிறந்தநாள் கொண்டாட்டம்!
போலீஸ்காரனுக்குத் தெரியாமல் எந்தவொரு திருட்டும் நடைபெறாது என்று நம்மூர் கிராமங்களில் பெரியவர்கள் சொல்வார்கள். அதை நிஜமாக்குவது போலவே பல குற்ற சம்பவங்கள் போலீசாரின் துணையோடு தான் நடைபெறுகிறது என்பதை நீதிமன்ற விசாரணைகளில் வெளிவந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.
இந்நிலையில், சட்டத்தை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரே, பாலியல் குற்றவாளி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்று, நடுரோட்டில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி, கேக்கை குற்றவாளிக்கு ஊட்டியும் விட்ட சம்பவம் மகாராஷ்டிராவின் அமராவதி பகுதியில் அரங்கேறி பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
சமூக வலைதளங்களில் தீயாய்ப் பரவி வரும் அந்த வீடியோவில், அயான் அகமது 'பாஸ்' என்று எழுதப்பட்ட டி-ஷர்ட் அணிந்து, நள்ளிரவில் பொதுச் சாலையை மறித்து, நடுரோட்டில் பிறந்தநாள் கேக் வெட்டுகிறார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர், அந்த அத்துமீறலைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்ததுடன், ஒரு காவல்துறை அதிகாரி குற்றவாளிக்குக் கேக் ஊட்டி வாழ்த்துத் தெரிவிக்கிறார்.
இந்தச் சம்பவத்தின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டுப் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதோடு, மிரட்டல் விடுக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளனர்.இந்த வீடியோ வெளியாகிப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. "குற்றவாளிகளுக்குக் காவல்துறையே துணை போகிறதா?" எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான விசாரணைக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், பொது இடத்தில் இடையூறு விளைவித்தது மற்றும் மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் அயான் அகமது மீது கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.