விஜய்க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி... மீண்டும் தள்ளிப்போகும் 'ஜனநாயகன்' - வேட்பாளர் நேர்காணலிலும் சிக்கல்!

 

விஜய் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் வெளியீடு மார்ச் 19ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு வழக்கில் நாளை டெல்லியில் விஜய் நேரில் ஆஜராக வலியுறுத்தி சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், நாளை திட்டமிட்டப்படி வேட்பாளர் நேர்காணல் நிகழ்வும் நடக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய் நேர்காணல் நடத்துவதையே வேட்புமனு தாக்கல் செய்திருப்பவர்கள் விரும்புகின்றனர்.

ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் வசனங்கள், காட்சிகள் காரணமாகச் சென்சார் வாரியம் சான்றிதழ் வழங்கக் கூடுதல் நிபந்தனைகளை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ரிவைசிங் கமிட்டி இப்படத்தைப் பார்வையிட்டு மறுதணிக்கை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதில் படக்குழு அளிக்கும் விளக்கங்கள் மற்றும் அவர்கள் செய்யும் மாற்றங்களைப் பொறுத்துச் சான்றிதழ் கிடைக்கும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்திருந்தனர். 

சென்சார் சான்றிதழ் மார்ச் 15-ஆம் தேதிக்குள் கிடைத்துவிட்டால், வரும் மார்ச் 19-ஆம் தேதி (வியாழக்கிழமை) படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப் படக்குழுத் திட்டமிட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டப்படி இன்று தணிக்கை அதிகாரிகள் படம் பார்க்கவில்லை என்றும், படம் பார்ப்பது தள்ளிப் போவதாகவும் காலையில் வெளியான செய்தி விஜய்யை அப்செட் செய்திருந்த நிலையில், இப்போது டெல்லியில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருப்பது அடுத்த அதிர்ச்சியை அளித்துள்ளது.