எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவிலிருந்து  விலகல்... தமிழக அரசியலில் அடுத்தடுத்து பரபரப்பு!

 

அதிமுக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த சலசலப்புகள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. அண்மையில் தனது சட்டமன்ற உறுப்பினர் (MLA) பதவியை அதிரடியாக ராஜினாமா செய்த கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இன்று (ஜூன் 30) அக்கட்சியின் அடிப்படைப் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பதவிகளிலிருந்தும் விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, தமிழக அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அந்த உருக்கமான அறிக்கையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது மிகக் கடுமையான மற்றும் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மாற்றுக்கட்சியான திமுகவுடன் எடப்பாடி பழனிசாமி ரகசியக் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சியமைக்க முயன்றதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இந்தத் துரோகச் செயல் தனது மனதை ஆழமாகக் காயப்படுத்தி ரணமாக்கியதாக வேதனை தெரிவித்துள்ளார்.

தலைமை எடுத்த இந்தத் தவறான முடிவே, தற்போதைய சூழலில் இத்தனை முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியிலிருந்து வெளியேறுவதற்குக் முதன்மைக் காரணம் என்றும் அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.கட்சியின் ஆரம்பகால கொள்கைகளுக்கு மாறாகத் தற்போதைய தலைமை செயல்படுவதை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ள அவர், மீளா கண்ணீருடனும் சொல்லொண்ணா துயருடனும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளுக்கு எதிராகத் தான் இத்தனை காலம் உழைத்த இயக்கத்திலிருந்து விடைபெறுவதாகத் தெரிவித்துள்ளார்.