பெங்களூருவில் கொடூரம்.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் 19 வயது இளம்பெண் கழுத்தறுத்துக் கொலை... வருங்கால கணவன் வெறித்தனம்!

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் டி.ஜே. ஹள்ளி பகுதியில், திருமண நிச்சயதார்த்தம் முடிந்த இளம்பெண் ஒருவர் தனது வருங்கால கணவராலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஜோயா (19)  எனும் இளம்பெண்ணுக்கும், ஷபீல் (20) என்பவருக்கும் திருமணம் செய்யப் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று மார்ச் 16ம் தேதி திங்கள்கிழமை, ஆள் நடமாட்டமற்ற ஒரு வீட்டில் இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஷபீல், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜோயாவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டி.ஜே. ஹள்ளி போலீசார், ஜோயாவின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக உள்ள கொலையாளி ஷபீலைப் பிடிக்க பெங்களூரு கிழக்கு மண்டல காவல் துணை ஆணையர் விக்ரம் அமதே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

"நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு ஏன் இந்த மோதல் ஏற்பட்டது? இது சந்தேகத்தின் அடிப்படையில் நடந்த கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?" என்பது ஷபீல் பிடிபட்ட பிறகே முழுமையாகத் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிச்சயிக்கப்பட்ட பெண்ணையே இளைஞர் ஒருவர் கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் டி.ஜே. ஹள்ளி பகுதியில் பெரும் சோகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜோயாவின் குடும்பத்தினர் இந்தத் துயரச் சம்பவத்தால் நிலைகுலைந்து போயுள்ளனர்.