கர்நாடகாவில் கொடூரம்.. இளம்பெண் கடத்தப்பட்டு 4 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை!
கர்நாடக மாநிலம் சிர்வார் தாலுக்கா ஹோக்ரானி கிராமத்தில் 22 வயதுப் பெண் ஒருவர் நான்கு பேரால் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை அளித்த புகாரின்படி, ஆகஸ்ட் 19 அன்று இரவு இயற்கை உபாதையைக் கழிப்பதற்காகக் கிராமத்தின் புறநகர்ப் பகுதியான பீரப்பா கோயில் அருகில் சென்றபோது அந்தப் பெண் நான்கு பேரால் கடத்தப்பட்டுள்ளார். நான்கு பேரும் சேர்ந்து அப்பெண்ணை வன்கொடுமை செய்துள்ளனர். தங்களை குடும்பத்தினரிடம் அவள் காட்டிவிடுவாள் என்ற அச்சத்தில், அவளைக் கொலை செய்துள்ளனர்.
குற்றவாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்புவதற்கு முன்பு பெண்ணின் உடலை தொட்டலா கிராமத்தில் உள்ள கிணற்றில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை குடும்பத்தினர் கிணற்றில் உடலைக் கண்டெடுத்தனர். தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள நான்காவது நபரைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.