எடப்பாடியின் அரசியல் எதிர்காலம் என்னாகும்? அதிமுக சட்டமன்றத் தலைவர் யார்? சபாநாயகர் கையில் அதிகாரம்?!

 

அதிமுக சட்டமன்றத் தலைவரை அங்கீகரிப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறியால், சபாநாயகரின் முடிவு தமிழக அரசியல் களத்தில் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இரு தரப்பினரும் தங்களுக்கே எம்.எல்.ஏ.க்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகக் கூறி சபாநாயகரிடம் தனித்தனியே கடிதம் அளித்துள்ளனர். இரு தரப்பு கடிதங்களிலும் பெரும்பாலான கையெழுத்துக்கள் இடம் பெற்றுள்ளதால், எவரை அங்கீகரிப்பது என்பதில் சபாநாயகருக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சபாநாயகர் எடுக்கும் இந்த முடிவுதான் சட்டசபையில் அதிமுக-வின் அதிகாரப்பூர்வ தலைமை யாரைத் தீர்மானிக்கும். அவர் எடுக்கும் முடிவை எவரும் நிர்ப்பந்திக்க முடியாது என்பதால், இப்போதைக்கு அவர் முடிவைத் தள்ளிப்போடவும் வாய்ப்புள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக முடிவு அமைந்தால், கொறடா உத்தரவுப்படி அதிமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் எதிராகச் செயல்பட வேண்டும்; மீறினால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்கள் பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.

மாறாக, வேலுமணி தரப்பிற்கு ஆதரவான முடிவு வந்தால், அவர்கள் தாராளமாகத் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியும். தேர்தல் ஆணையத்தின் முடிவே இறுதியானது என்பதால், சட்டப்படி ஒரு கட்சியைச் சபாநாயகர் இரண்டாகப் பிரிக்க முடியாது. அதேநேரம், மூன்றில் இரண்டு பங்கு அதாவது 32 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றிணைந்து தவெக-வுக்கு ஆதரவு அளித்தால், கட்சி தாவல் தடை சட்டம் அவர்கள் மீது பாயாது என்பதும் குறிப்பிடத்தக்கது.