இது என்னடா புதுசா இருக்கு.. சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகள் இறுதி சடங்கு.. திகிலூட்டும் காட்சிகள்..!

 
வினோதமாக அகோரி முறைப்படி உடல் தகனம் செய்யப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி பூவாளூரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது 60). இவர் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். நேற்று காலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் இவரது உறவினர்கள் வழக்கம் போல் தங்களது இறுதி சடங்கை செய்து திருச்சி ஓயாமரி சுடுகாட்டிற்கு தகனம் செய்ய கொண்டு வந்தனர்.இதனிடையே அவரது உறவினர் இறந்த பாலசுப்ரமணியனின் உடலுக்கு அகோரி முறைப்படி ஆன்மா சாந்தி பூஜை செய்து தகனம் செய்ய வேண்டும் என முடிவு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து திருச்சி அரியமங்கலத்தில் காசியில் பயிற்சி பெற்ற அகோரி மணிகண்டன் அகோரிமடம் நடத்தி வருகிறார். அவரிடம் இது குறித்து தகவல் அளித்தனர்.  அகோரி மணிகண்டன் ஓயாமரி தன் சீடர்களுடன் உடல் முழுவதும் திருநீர் அணிந்து கொண்டு சுடுகாட்டிற்கு சென்றார். இறந்த பாலசுப்பிரமணியனின் உறவினர்கள் தங்களது இறுதி சடங்கை முடித்த பின்னர் அகோரி மணிகண்டன் தகன மேடையில்  வைக்கப்பட்டிருந்த பாலசுப்ரமணியனின் சடலத்தின் மீது அமர்ந்து மந்திரங்கள் ஜெபித்து பூஜை செய்தார். 

அப்போது சக அகோரிகள் தமரா மேடம் அடித்தும், சங்கு ஒலி எழுப்பியும் ஹர, ஹர, மகாதேவா என முழங்கினர். இறுதியில் பாலசுப்பிரமணியனின் சடலத்திற்கு தீபாரதனை காண்பித்து பூஜையை நிறைவு செய்தார். காசியில் நடைபெறக்கூடிய இந்த ஆன்ம சாந்தி பூஜையானது திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அரங்கேறிய சம்பவம் சற்று திகிலூட்டும் விதமாக இருந்தது. மேலும், அகோரி மணிகண்டன் சில ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சுடுகாட்டில் தன் தாயார் சடலம் மீது அமர்ந்து ஆன்ம சாந்தி பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.