இன்று தேசிய அளவிலான GPAT தேர்வுக்கான நகர விபரங்கள் வெளியீடு - யார் யார் எழுதலாம்?!
மருந்தியல் பட்டதாரிகளுக்கான தேசிய அளவிலான பட்டதாரி மருந்தியல் நுழைவுத் தேர்வு (GPAT 2026) குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகிறது. இந்தியாவிலுள்ள முன்னணி மருந்தியல் கல்வி நிறுவனங்களில் எம்.பார்ம் (M.Pharm) போன்ற முதுகலைப் படிப்புகளில் சேருவதற்கான ஜிபேட் (GPAT) தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
தேர்வர்கள் எந்த நகரத்தில் தேர்வு எழுத உள்ளனர் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் வகையில் 'தேர்வு நகர விபரத் தாள்' இன்று பிப்ரவரி 25ம் தேதி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
தேர்வர்கள் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி natboard.edu.in அல்லது nbe.edu.in ஆகிய இணையதளங்களில் இருந்து இதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஹால் டிக்கெட் அல்ல. தேர்வர்கள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே திட்டமிடுவதற்கு வசதியாக மட்டுமே இந்த நகர விபரங்கள் அறிவிக்கப்படுகின்றன.
அதிகாரப்பூர்வ ஹால் டிக்கெட் மார்ச் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜிபேட் 2026 தேர்வு வரும் மார்ச் 15, 2026 அன்று கணினி வழித் தேர்வாக நடைபெறும். மொத்தம் 125 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் கழிக்கப்படும்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.