தண்டனை கடுமையாக்கப்படுமா? ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை... சீரழிகிறதா தமிழகம்?!

 

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, தமிழகம் தடம் மாறி சீரழிந்துக் கொண்டிருக்கிறதா என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாறினாலும், அவலம் மாறவில்லை என்று பொதுமக்கள் குமுறத் தொடங்கி உள்ளனர்.

திருவள்ளூர் பகுதியில் 7-ம் வகுப்பு படித்து வருந்த மாணவி ஒருவரிடம் ஆட்டோ ஓட்டுநரான நந்தகுமார் (25) என்பவர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இது குறித்துத் தகவலறிந்த மாணவியின் தாய் உடனடியாக   'சிங்கப் பெண்' சிறப்புப் படைக்கு தகவல் கொடுத்த நிலையில்,ஆட்டோ ஓட்டுநரை  பிடித்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதே போல் பூந்தமல்லி காட்டுப்பாக்கம் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது சிறுமியைக் கடத்திச் சென்று சுடுகாட்டுக்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுநர் சரவணன் என்பவரையும்  போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தாம்பரம் அடுத்த படப்பை பகுதியில் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவருக்கு அங்கு தங்கி வேலைப் பார்த்து வந்த வடமாநில இளைஞர் ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி பயத்தில் அலறி கூச்சலிடவே, சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வடமாநில இளைஞரைப் பிடித்துச் சரமாரியாகத் தர்ம அடி கொடுத்து மணிமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள இந்த தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து போலீசார்   சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.