undefined

 மாமூல் தர மறுத்த பெண் வியாபாரி கொடூரக் கொலை... டிடிவி தினகரன் கடும் கண்டனம்!

 
 

சென்னை திருவொற்றியூரில் மாமுல் தர மறுத்த பெண் வியாபாரி ரவுடியால் கொடூரமாக கொலைச் செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். கொலை - ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கத்தவறிய தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

தமிழகத்தில் அதிகரித்து வரும் ரவுடிகள் கலாச்சாரத்தையும், கூலிப்படையையும் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை, ஆட்சியாளர்களின் ஏவல்துறையாக மட்டுமே செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தொடங்கி அனைத்து தரப்பினரின் உயிர் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அடிக்கடி நிகழும் கொலை, கொள்ளை, போதைப் பொருட்களின் தாராளப் புழக்கம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும் அதனை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்காத அரசு நிர்வாகத்தின் மீதும், காவல்துறையின் மீதும் நம்பிக்கை இழந்துவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சற்று நேரத்திற்கு முன்பாக கூட சென்னை கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் இருவரை கத்தியால் குத்திவிட்டு அடையாளம் தெரியாத கும்பல் தப்பியோடிய சம்பவமும் நடந்தேறியுள்ளது.

எனவே இனியாவது காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு சீர்கேடுகளை களைய தேவையான நடவடிக்கைகளை எடுப்பதோடு, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரவுடிகள் கலாச்சாரத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.