கணவர் இறந்த துக்கத்தில் இளம்பெண்தற்கொலை - நாமக்கல்லில் சோகம்!
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே, கணவர் உயிரிழந்த 17-வது நாளில் வடமாநில இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமாநிலத் தம்பதி: ஒடிசா மாநிலம் நாகராங்பூர் மாவட்டம், ராங்கர் பகுதியைச் சேர்ந்தவர் முணாகோண்ட். இவரது மனைவி சுனிதா கோண்ட் (25). இவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆகிறது. தம்பதியினர் இருவரும் நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சின்ன தளிகை பகுதியில் இயங்கி வரும் கோழிப்பண்ணையில் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர்.
கணவன்-மனைவி இடையே குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், கடந்த ஜூலை 10 அன்று மது அருந்திவிட்டு வந்த முணாகோண்டிடம் சுனிதா கோண்ட் கோபித்துக் கொண்டதால் மனமுடைந்த முணாகோண்ட் வீட்டிற்கு வெளியே ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கணவரின் மறைவால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான சுனிதா கோண்ட், அதே பகுதியில் உள்ள தனது உறவினர் ஜிதேந்தர் கோண்ட் வீட்டில் தங்கிப் பணியாற்றி வந்தார்.
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த சுனிதா கோண்ட், நேற்று காலை வீட்டில் உள்ள கம்பியில் துப்பட்டாவால் தூக்கிட்டுக் கொண்டார். உடனடியாக அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மன அழுத்தமோ அல்லது தற்கொலை எண்ணமோ மேலிடும் போது உரிய ஆலோசனையும் உதவியும் பெற கீழ்க்காணும் எண்களைத் தொடர்புகொள்ளவும்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044-24640050 மாநில அரசு உதவி மையம்: 104