இளம்பெண் மருத்துவர் மயக்க ஊசி செலுத்தி தற்கொலை - உருக்கமான கடிதம் சிக்கியது!

 

மருத்துவ மாணவிகள் தற்கொலை செய்துக் கொள்ளும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.டி. நுரையீரல் மருத்துவம் இறுதியாண்டு படித்து வந்த 26 வயது பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி வெங்கட்டா நகரில் பெற்றோருடன் வசித்து வந்த  மாணவி, தேர்வுக்கு தயாராகி வந்ததாகவும், கடந்த சில நாட்களாக சோர்வாக காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு பெற்றோருடன் உணவு சாப்பிட்டுவிட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் பெற்றோர் சந்தேகமடைந்தனர். கதவை திறக்க முடியாத நிலையில், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவு திறக்கப்பட்டபோது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

தகவலறிந்து வந்த பெரியகடை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது அறையில் இருந்த டைரியில் எழுதப்பட்டிருந்த தற்கொலைக்கு முன்பான உருக்கமான கடிதமும் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் தனது முடிவுக்கு யாரையும் பொறுப்பாக்க வேண்டாம் என்றும், பெற்றோர் மற்றும் நண்பர்கள் தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் அவர் எழுதியிருந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.