வரதட்சணைக் கொடுமையால் இளம்பெண் தற்கொலை - கணவர், மாமனார், மாமியார் கைது!
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமணமான சில மாதங்களிலேயே வரதட்சணைக் கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரில் பெண்ணின் கணவர் மற்றும் மாமனார், மாமியாரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள சின்னமூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபிகா (23). இவருக்கும் வல்லரசு என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் பெற்றோர்களால் முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
திருமணமான ஒரே வாரத்திலேயே தீபிகாவின் கணவர் வல்லரசு, மாமனார் விநாயகம் மற்றும் மாமியார் சித்ரா ஆகியோர் தங்களுக்குக் கூடுதலாகப் பணமும் நகையும் வரதட்சணையாக வேண்டும் என்று கேட்டு தீபிகாவைத் தொடர்ந்து மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாகக் கூறப்படுகிறது.
மாமியார் வீட்டில் நாளுக்கு நாள் அதிகரித்த இந்த வரதட்சணைக் கொடுமைகளைத் தாங்க முடியாத தீபிகா, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜோலார்பேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவர் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இளம்பெண் தீபிகாவின் திடீர் தற்கொலை குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், ஜோலார்பேட்டை காவல்துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.