திமுகவின் ரூ.8,000 கூப்பனை நம்பி ஏமாந்த பெண்கள்... கடைகளில் குவிந்த கூட்டம்.. கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்த பறக்கும் படை!
தமிழகம் முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தருமபுரியில் திமுகவினர் வழங்கிய ஒரு ‘மாதிரி கூப்பன்’ பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும், கடைக்காரர்களிடையே பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி பகுதியில் திமுக நிர்வாகிகள் சிலர், ரூ.8,000 மதிப்புள்ள மாதிரி கூப்பன்களைப் பெண்களுக்கு விநியோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் கூப்பன்களைப் பெற்றுக் கொண்ட பெண்கள், அது உண்மை என்று நம்பி அந்தப் பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் மற்றும் துணிகளைக் கேட்டுத் திரண்டனர்.
“இது வெறும் மாதிரி கூப்பன்தான், இதை வைத்துப் பொருட்கள் தர முடியாது” என கடை உரிமையாளர்கள் விளக்கியும், பெண்கள் அதனை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இது குறித்து தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
திமுக நிர்வாகி ஒருவரிடம் இருந்த இத்தகைய நூற்றுக்கணக்கான கூப்பன்களை அதிகாரிகள் கட்டுக்கட்டாகப் பறிமுதல் செய்தனர். தேர்தல் விதிமுறைகளை மீறி பொதுமக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது மற்றும் வாக்காளர்களுக்கு ஆசை வார்த்தை காட்டியது போன்ற பிரிவுகளின் கீழ் அந்த திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பணம் கிடைக்கும் அல்லது பொருட்கள் வாங்கலாம் என ஆவலோடு வந்த பெண்கள், அது வெறும் ‘மாதிரி’ என்று தெரிந்ததும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். தேர்தல் நேரத்தில் இதுபோன்ற போலி வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.