"உயிரோடு திரும்ப முடியாது"... பாமக வேட்பாளருக்குக் கொலை மிரட்டல்!
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி (தனி) தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ச.முரளி சங்கருக்கு, ஒரு கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகப் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வந்தவாசி தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முரளி சங்கரின் காரை, மச்சேந்திரன், விக்கி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் வழிமறித்ததாகக் கூறப்படுகிறது.
"இனி நீ தொகுதிக்குள் வந்தால் வெட்டிக் கொலை செய்து விடுவோம்.. உயிரோடு திரும்பிப் போக முடியாது," என்று அந்தக் கும்பல் முரளி சங்கரை வெளிப்படையாக மிரட்டியதாக டாக்டர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் செயல்படுபவர்கள், தற்போது தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்தில் இத்தகைய கீழ்த்தரமான மிரட்டல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு வேட்பாளர் தனது தொகுதிக்குள் சென்று வாக்கு சேகரிப்பதைத் தடுப்பதும், அவருக்குக் கொலை மிரட்டல் விடுப்பதும் ஜனநாயகத்திற்குப் புறம்பானது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தனது கட்சி வேட்பாளருக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் குறித்துத் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், வேட்பாளருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.