மடத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு... பெரும் பரபரப்பு! 

 

சென்னை கொடுங்கையூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர்  39 வயது செல்வேந்திரன் என்பவர் இன்று காலை வழக்கம் போல மடத்துக்கு வந்து முறைப்படி வழிபட்டுள்ளார். பின்னர் அவர் மடத்தை முழுமையாகச் சுற்றிவந்த போது, மடத்துக்குப் பின்புறம் உள்ள புதரில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக இதுகுறித்து அவர் அங்கிருந்த மடத்தின் நிர்வாகிகளுக்குத் தகவல் தெரிவிக்கவே, அவர்கள் இச்சம்பவம் குறித்துக் காவல் துறையினருக்கு அவசரமாகத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்குச் செம்பியம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி மற்றும் வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று வாலிபரின் சடலத்தை மீட்டனர். பின்னர் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகச் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவருக்குச் சுமார் 35 வயது இருக்கலாம் என்று காவல் துறை அதிகாரிகள் தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளதுடன், அந்த நபர் யார், எதற்காக மடத்துக்கு வந்தார், அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முன் விரோதம் காரணமாக ஏதேனும் கும்பல் இவரை வேறு பகுதியில் இருந்து கடத்திவந்து இங்கு படுகொலை செய்தார்களா என்ற கோணத்திலும் போலீசார் தங்களின் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கொலையாளிகளை விரைந்து பிடிப்பதற்காக மடம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பதிவுகளைப் போலீசார் முழுமையாகச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மடத்தின் பின்புற புதரில் வாலிபர் சடலமாகக் கிடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.