முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாட்கள் டெல்லி சுற்றுப்பயணம்! முழுத் தகவல்கள்!

 

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக டெல்லி செல்கிறார். இன்று மாலை சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் டெல்லி செல்லும் முதல்வருக்கு தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது.

நாளை ஜூன் 17ல் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து 3 நாட்கள் டெல்லியில் தங்கி இருக்கும் அவர் தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.

டெல்லி லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பில் 35 முக்கிய வி‌ஷயங்கள் குறித்து பிரதமருடன் ஸ்டாலின் பேச உள்ளார். இந்த சந்திப்பில் முதல்வருடன் பிரதமர் அலுவலக அதிகாரிகள், இறையன்பும் உடன் இருப்பார்கள்.
நிர்வாக ரீதியாக நடைபெறும் இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரம் நீடிக்கலாம். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாட்டு நலன்கள் குறித்த திட்டங்கள் குறித்து பேச உள்ளார். இதன் பிறகு பிரதமர் மோடியும், மு.க.ஸ்டாலினும் தனியாக சந்தித்து பேசுகிறார்கள். இந்த சந்திப்பு 10 நிமிடங்கள் வரை நீடிக்கலாம்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் மு.க.ஸ்டாலினை அழைத்து வர மோடியின் சிறப்பு பாதுகாப்பு படையில் உள்ள புல்லட் புரூப் காரை மோடி அனுப்பி வைக்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக முதல்வர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் டெல்லி சென்று இருந்தபோது இதுபோன்ற புல்லட் புரூப் காரில் அழைத்து செல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைப்பதற்காக திமுக மூத்த தலைவரான டி.ஆர்.பாலு, மூத்த அமைச்சரான துரைமுருகன் இருவரும் டெல்லி சென்றுள்ளனர். மேலும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஏ.கே.எஸ்.விஜயனும் இவர்களுடன் சென்றுள்ளார்.

மேலும் ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா, டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக உள்ளார். பிரதமரை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசும் போது இவரும் உடன் இருக்கலாம். தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நன்கு அறிந்தவர்.

பிரதமருடனான சந்திப்புக்கு பிறகு மு.க.ஸ்டாலின் ஜூன்18ம் தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோரையும் சந்தித்து அவர்களுடன் மாநிலத்தின் தேவைகள் குறித்து அவர்களுடனும் மு.க.ஸ்டாலின் பேச உள்ளார்.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார்.தமிழக டி.ஜி.பி. திரிபாதி விரைவில் ஓய்வுபெற உள்ளார். இதையடுத்து புதிய டி.ஜி.பி. நியமனம் தொடர்பாகவும் இருவரும் பேசுவதற்கு வாய்ப்புள்ளது. இது தவிர பாதுகாப்புத்துறை அமைச்சராக உள்ள ராஜ்நாத் சிங்கையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டில் ராணுவ தொழிற்சாலை அமைப்பது குறித்தும், இலங்கையில் அமைய உள்ள சீன துறைமுகத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட உள்ள பாதுகாப்பு பிரச்சனைகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் விவரிப்பார்.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசலாம். நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை விரைந்து அளிப்பது குறித்தும், கடன் தள்ளுபடி குறித்தும் நிர்மலா சீதாராமனுடன் விவாதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒன்றிய ரயில்வே மற்றும் வர்த்தக அமைச்சரான பியூஷ் கோயலையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழ்நாட்டிற்கு ரயில்கள் வாயிலாக ஆக்சிஜன் அனுப்பப்படுவது குறித்து இருவரும் பேச இருப்பதாக தெரிகிறது.

அரசுமுறை சந்திப்புகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தமாக காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி.யுமான ராகுல்காந்தியை அவர் சந்தித்து பேச வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சந்திப்பின் போது டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும், தமிழ்நாடு தலைவர்கள் சிலரும் உடன் இருப்பார்கள் என்று தெரிகிறது.

மக்களவையில் குறைந்த பட்சம் 10 எம்.பி.க்கள் உள்ள கட்சிகளுக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்கப்படுகிறது. டெல்லி பயணத்தின் போது இந்த பணிகளையும் மு.க.ஸ்டாலின் பார்வையிட உள்ளார். 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு ஜுன்18 மாலை அல்லது 19 காலை சென்னை திரும்புவார் என முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.