ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை! 6 வாரத்தில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

 

ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதிய தமிழக அரசு, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது.

அந்த ஆணையம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், இதுவரை ஆறுமுகசாமி ஆணையம் இடைக்கால அறிக்கையோ அல்லது இறுதி அறிக்கையையோ தாக்கல் செய்யவில்லை. ஜெயலலிதா உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி இருக்கும் நிலையில், இதுவரை ஏன் அறிக்கை அளிக்கவில்லை என்ற கேள்வி வலுத்துள்ளது. அதிமுக ஆட்சி இருந்த வரையில் விசாரணை துரிதப்படுத்தப்படவில்லை. திமுக ஆட்சியிலாவது ஜெயலலிதா மரணம் குறித்த மர்மம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “3 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஏன் உத்தரவிடக் கூடாது” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், “இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.