சர்வதேச நாணய நிதியத்தின் புதிய துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமனம்

 

அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளியல் வல்லுநகராக கர்நாடகத்தின் மைசூரில் பிறந்த அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது, அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குனராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ளது. இதனை தொடர்ந்து அந்த பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் துணை நிர்வாக இயக்குனர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும்.