அதனால பாஜகவுக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது! ஆவேசமான குஷ்பு!

 

நாடாளுமன்றத்திலும் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் நேற்று எதிரொலித்தது. இதன் காரணமாக, அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டன என நாடாளுமன்றத்தில் கூறப்பட்டது. 5 முறை தொலைபேசியை மாற்றியும், என்னை உளவு பார்த்தனர் என பிரசாந்த் கிஷோர் பகிரங்கமாகவே கூறினார். இந்தியாவில் பிரபல அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என சுமார் 300 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு, தனது ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் புகார் அளித்து விட்டு, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நடிகை குஷ்பு, எனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதால், அதனை தவறாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. அதனால் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளேன்.

ராகுல்காந்தி செல்போன் உளவு பார்க்கப்பட்டதா என்று செய்தியாளர்களின் கேள்விக்கு, ராகுல் காந்தியின் செல்போனை உளவு பார்ப்பதால் பாஜகவுக்கு எந்த பயனும் இல்லை என்றார். உங்களுக்கு தமிழிசையைப் போல் ஆளுநர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, ஆளுநர் பதவிக்கு வரும் அளவிற்கு எனக்கு வயதாகவில்லை என தெரிவித்தார்.