கவர்னருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திப்பு!

 

தமிழ்நாட்டில் பரவலாக ஏற்பட்டுள்ள மழை, வெள்ள பாதிப்புகள் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேச உள்ளார்.

தமிழக கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில் பயிர்கள் சேதமடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறித்து பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறார். சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இன்று காலை 11 மணிக்கு ஆளுநரை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மழையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது.