இன்று ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர்

 

விஜயதசமி நாளான இன்று (2021 அக்டோபர் 15) மதியம் 12.10 மணிக்கு, ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றுகிறார்.

பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு இணை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு தொழிலை சேர்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

7 புதிய நிறுவனங்களை பற்றி:

நாட்டின் பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பில் தற்சார்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக, அரசுத் துறையிலிருக்கும் ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை 100 சதவீதம் அரசுக்குச் சொந்தமான ஏழு நிறுவனங்களாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. மேம்பட்ட செயல்பாட்டு தன்னாட்சி, செயல்திறன், புதிய வளர்ச்சி சாத்தியக்கூறுகள் மற்றும் புதுமைகளை இந்த நடவடிக்கை உருவாக்கும்.

நிறுவப்பட்டுள்ள ஏழு புதிய பாதுகாப்பு நிறுவனங்கள் வருமாறு: முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட்; ஆர்மர்ட் வெஹிகல்ஸ் நிகம் லிமிடெட்; அட்வான்ஸ்ட் வெப்பன்ஸ் மற்றும் எகியுப்மென்ட் இந்தியா லிமிடெட்; ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட்; யந்த்ரா இந்தியா லிமிடெட்; இந்தியா ஆப்டெல் லிமிடெட்; மற்றும் கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட்.