அதிகாரிகளை அவதூறாகப் பேசிய வழக்கில் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்

 

கோயில்களை பராமரிப்பதில் இந்து சமய அறநிலையத் துறை சரியாக செயல்படவில்லை என பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா நீண்டகாலமாக குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூரில் கடந்த 2018ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் எச். ராஜா கலந்து கொண்டார்.

வேடசந்தூர் கூட்டத்தில் அவர் கூறியதாவது., ”புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில் சொத்து ரூ.25 கோடி வீணாகிவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அறநிலையத் துறை கைப்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை செயல்படுத்தவில்லை என்றார். மேலும், இந்து அறநிலையத் துறை ஊழியர்கள் குறித்தும் அவரது வீட்டுப் பெண்கள் குறித்தும் தரக்குறைவான வார்த்தைகளால் எச். ராஜா விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், எச். ராஜாவுக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. விசாரணை நடைபெற்று வந்த நிலையில் ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு ஆஜராகாமல் எச் ராஜா தவிர்த்து வந்தார். இந்த நிலையில் இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதும் எச் ராஜா விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.