ஆண்களுக்கு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

 

பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் குற்றச்சாட்டை அமைச்சர் ராஜகண்ணப்பன் மறுத்துள்ளார்

மாநகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் எனக் கூறிவிட்டு, ரூ. 5-க்கு விற்கப்பட்ட பயணச்சீட்டை ரூ. 10 ஆக உயர்த்தி ஆண்களிடம் வசூல் செய்யப்படுவதாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “ஓபிஎஸ் சொல்வதை போல அரசுப் பேருந்துகளில் ஆண்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யவில்லை. ஒரே ஒரு இடத்தில் கூடுதல் கட்டணம் வசூலித்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பொதுவாக குற்றம்சாட்டக்கூடாது.

மேலும், இதுவரை 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தியுள்ளனர்” என்றார் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.