இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000/- ! இந்த தவறை எல்லாம் செய்யாதீங்க!

 

தமிழகத்தில் தற்போது 5 வகையான ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அமுலில் உள்ளன. இந்த கார்டுகளை பொறுத்தவரை பெரும்பாலான கார்டுகளில் குடும்பத் தலைவர் இடத்தில் ஆண்களின் புகைப்படங்கள் தான் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் மாதம் தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘PHH மற்றும் PHH-AAY என்ற இரு வகையான ரேஷன் கார்டுகளில் குடும்பத் தலைவராக பெண்ணின் புகைப்படம் இருந்தால் மட்டுமே அரசு வழங்கும் ஆயிரம் ரூபாயை பெறமுடியும்’ என, சமூக வலைதளங்களில் தவறான செய்திகள் உலா வருகின்றன.

இதன் அடிப்படையில் வட்டார வழங்கல் அலுவலர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையங்களில் குடும்பத் தலைவரின் புகைப்படம் மட்டுமின்றி, ரேஷன் அட்டைகளின் வகைகளை மாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலை இடைத்தரகர்கள் பயன்படுத்தி, பொதுமக்களிடம் ஆயிரக் கணக்கில் பணம் பெற்று ஏமாற்றுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

குடும்பத் தலைவரின் புகைப்படத்தை நீக்கிவிட்டால், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் இவற்றை பெற முயலும்போது சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து துறை அதிகாரிகள் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி “குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ1000/-வழங்குவது குறித்து அரசிடமிருந்து இன்னும் முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை; பொதுமக்கள் வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இந்தத் திட்டம் குறித்து தமிழக அரசு முறையான விரிவான விளக்கத்தை வெளியிட வேண்டும் என குடும்பத்தலைவிகள் பலர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.