அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

 

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள 12,959 கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்ட தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஒரு கால பூஜை செய்யும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதனால் ஆண்டுக்கு 13 கோடி ரூபாய் அரசுக்கு கூடுதலாக செலவாகும்.