சைப்ரஸ் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து: 8 பேர் உயிரிழப்பு.. மீட்புப் பணிகள் தீவிரம்!

 

வடக்கு சைப்ரஸ் அருகே நடுக்கடலில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சைப்ரசின் கைரேனியா நகரில் இருந்து துருக்கி நோக்கி சுமார் 270 பேருடன் சென்ற படகு எதிர்பாராதவிதமாக நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக் குழுவினர் இதுவரை 237 பேரைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடலில் காணாமல் போன மற்ற 22 பேரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், படகின் கேப்டன் உட்பட 8 பேரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.