பரபரப்பு! கோவிலில் தீக்குளித்து உயிர் காணிக்கை செலுத்திய திமுக தொண்டர்!

 
பரபரப்பு!  கோவிலில் தீக்குளித்து உயிர் காணிக்கை செலுத்திய திமுக தொண்டர்!

கரூர் மாவட்டம், லாலாபேட்டை பகுதியில் வசித்து வருபவர் உலகநாதன். இவருக்கு வயது 60. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தி.மு.க.வின் தீவிர தொண்டர் இவர். இவர் கரூர் அருகே மண்மங்கலத்தில் உள்ள புது காளியம்மன் கோவிலுக்கு பெட்ரோல் கேனுடன் வந்தார். கோவிலில் சாமி கும்பிட்ட அவர் சிறிது நேரம் கழித்து, தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் ஓடிவந்து உலகநாதன் உடலில் பற்றி எரிந்த தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் அதற்குள் தீ உடல் முழுவதும் பரவியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உலகநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கவும், செந்தில்பாலாஜி கரூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரானால் தனது உயிரை காணிக்கையாக செலுத்துவதாக இக்கோவிலில் வேண்டிக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வேண்டுதல் நிறைவேறியதால் ஆனி அமாவாசை தினமான நேற்று தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் இதுகுறித்து உலகநாதன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் கிடைத்துள்ளது. அதில், தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரவேண்டும் என்றும், கரூர் தொகுதியில் செந்தில்பாலாஜி வெற்றி வாகை சூடி அமைச்சராக வேண்டும் என மண்மங்கலம் காளியம்மன் கோவிலில் வைத்திருந்த வேண்டுதல் நிறைவேறியதால் கோவிலில் வேண்டிக் கொண்டபடி உயிர் காணிக்கை செலுத்தியுள்ளதாக உருக்கமாக தெரிவித்துள்ளார். இந்த தற்கொலை சம்பவம் தி.மு.க. தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web