குட்நியூஸ்! கூட்டுறவு வங்கிகளில் வணிகக் கடன் பெற அருமையான வாய்ப்பு!

 
குட்நியூஸ்! கூட்டுறவு வங்கிகளில் வணிகக் கடன் பெற அருமையான வாய்ப்பு!

தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் சரிந்த பொருளாதாரத்தை சீரமைக்கும் பொருட்டு வங்கிகள் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்து வருகின்றன. அந்த வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆலங்காயம், கந்திலி, பேரணாம்பட்டு உட்பட வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கிளைகள், 59 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், 3 நகர கூட்டுறவு வங்கிகள், 3 கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 3 வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள், 2 மலைவாழ் மக்கள் கூட்டுறவுச் சங்கங்கள், 2 கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் 19 பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இக்கூட்டுறவு நிறுவனங்களில் குறைந்த வட்டியில் ஏற்கனவே பயிர்க்கடன், விவசாய நகைக் கடன், பொது நகைக்கடன், கறவை மாட்டுக் கடன், சுய உதவிக் குழுக்கள் கடன், தனி நபர்க்கடன், சிறு வணிகக் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், டாம்கோ கடன், டாப்செட்கோ கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், தானிய ஈட்டுக்கடன், பண்ணை சாராக் கடன், வீட்டுக்கடன், வீட்டு அடமானக் கடன், அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளக் கடன், தொழில் முனைவோர் கடன், தாட்கோ கடன், கல்விக் கடன் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

தற்போது இத்துடன் கொரோனா காரணமாக வேலை இழந்து தவிக்கும் பட்டதாரி இளைஞர்கள், நலிவடைந்துள்ள கைவினை கலைஞர்கள், சாலையோர மற்றும் நடைபாதை சிறு, குறு வியாபாரிகள், பொது மக்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக கடன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடன்தாரர்களுக்கு வட்டி மானியத்துடன் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வாய்ப்பினை நல்முறையில் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தேவையான கடனுதவிகளை பெற்று கொள்ளலாம் என அம்மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

From around the web